யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்
பிரம்மராஜன்
நவீன ஜப்பானிய இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெறும் யாசுனாரி கவாபட்டா (1899-1972). ‘‘ஒரு குடும்பமோ வீடோ இன்றி” வளர்ந்தவர். இளையதலைமுறை நாவலாசிரியரான யூகியோ மிஷீமா, கவாபட்டாவை ‘‘நித்திய பயணி” என்று குறிப்பிட்டார். டோக்கியோ இம்பீரியல் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் கவாபட்டா. அவரின் நாவல் உலகு மனிதனின் தனிமைப்படுத்தலை சில்லிடும் கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறது. 1968 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கவாபட்டாவுக்கு வழங்கப்பட்டது. ஐந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கி றார்.
யூகியோ மிஷீமா, கவாபட்டாவின் ‘‘தூங்கும் அழகிகளின் இல்லம்” நாவலை “esoteric masterpiece” என்று சொன்னதோடன்றி, அதை நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஒப்பிடவும் செய்தார். பொய்யான கூச்சத்தையும், அசூயையும் விலக்கிவிட்டு கவாபட்டா என்ற கலைஞன் எழுதிய மிகச்சிறந்த நாவல் இது. மிக நுண்ணிய விவரணைகள், மற்றும் கச்சிதத் தன்மை ஆகியவை இந்த நாவலை கவாபட்டாவின் பிற நாவல்களில் இருந்து வேறுப்பட்டுத் தெரியவைக்கின்றன. கழுத்தை நெரிக்கும் இறுக்கத்துடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அலாதியான வாசிப்புத்தன்மை கொண்டது. தூங்கும் அழகிகளின் இல்லம் வயோதிகர்களுக்கான பிரத்யேகமான விடுதி. இதில் நிர்வாணமாய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்கள் இருப்பர். விடுதிக்கு வரும் வயோதிகர்கள், தூங்கும் பெண்களுடன் ஓர் இரவு தூங்கலாம். அவளை எழுப்புவதோ மோசமான ரசனையில் அவளை ஏதும் செய்ய முயல்வதோ கூடாது. சக்தி வாய்ந்த தூக்க மாத்திரையாலோ அல்லது போதைப் பொருளாலோ இந்தப் பெண்கள் உறங்க வைக்கப்படுகின்றனர். உறங்குவதற்கு முன் அவர்கள் என்னமாதிரி உடை அணிந்திருந்தனர் என்பதை அறிய முடியாது. எல்லோருமே கண்ணிப் பெண்கள். நீங்கள் யாருடன் உறங்குறீர்களோ அந்தப் பெண்ணை அடுத்து ஏதோ ஒரு நாளில் சந்திக்க நேர்ந்தால் அவளை அடையாளம் கண்டு பேசுவது குற்றம். அந்தப் பெண்களும் தாங்கள் எவருடன் உறங்கினர் என்பதை அறியமாட்டார்கள். உறங்க வைப்பதற்கு முன் எந்த வயோதிகனும் அவர்களைப் பார்த்ததில்லை- பார்க்கவும் கூடாது என்பது விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. விடுதியில் எவரும் மது அருந்தக்கூடாது.
67வயதாகும் எகுச்சி இந்த விடுதியைப் பற்றி அவருடைய நண்பரான கிகோ மூலமாக அறிகிறார். விடுதிக்கு வருகை தரும் வேறு நபர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யக் கூடாது. நாவலில் எகுச்சி, கிகோ, மற்றொரு ஃபுக்குரோ தவிர வேறு எவருக்கும் பெயர் தரப்படவில்லை. எகுச்சியின் மூன்று மகள்கள், அவரது மனைவி, எகுச்சியின் காதலிகள், தூங்கும் பெண்கள் எவருக்குமே பெயரில்லை.
சாவின் அருகாமையால் உந்தப்பட்டு உருவாகும் காமத்தின் பயங்கரம் எகுச்சியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. பாலியல் தன்மைக்கும் மென்மையானதொரு கவித்துவத்தைத் தருகிறது கவாபட்டாவின் நடை. ஐந்து இரவுகளில் எகுச்சி சந்திக்கும் பெண்களை வைத்து எகுச்சியின் சிந்தனைப் பாதைகளை பதிவு செய்கிறது நாவல். ஃப்ளாஷ்பாக்கும் நனவோடையும் (stream of Conciousness) கலந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. பாலியல் தன்மை(Sexuality)மற்றும் இறப்பு பற்றிய இரட்டைத் தியானங்கள் நாவலின் கருக்களம்.
முதன் முறையாக விடுதிக்கு வருகை தரும் எகுச்சியை நாற்பது வயது மிக்க யுவதி வழிநடத்துகிறாள். தேவைக்கு அதிகமான ஆர்வத்தில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் அவள் பதில் அளிப்பதில்லை. விடுதியின் மாடி அறையில் வெல்வெட் திரைச்சீலைகளால் சூழப்பட்டு நிர்வாணமாய் இளம் பெண் ஒருத்தி உறங்கிக் கொண்டிருக்கிறாள். அறையை அடைந்து, உடைகளைக் களைந்து அந்தப் பெண்ணின் படுக்கையில் சாய்ந்து கொள்ளும் எகுச்சிக்கு விநோதமான உணர்வு தோன்றுகிறது. தாயின் மார்பிலிருந்து பாலருந்தும் குழந்தையின் மீது வீசும் வாசம் வருவதாக அவர் உணர்கிறார். போர்வையை விலக்கிப் பார்க்கும் போது உறங்கும் அந்தப் பெண் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்க முடியாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்கிறார் எகுச்சி. அவரது மூன்றாவது மகள் குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கி வைத்திருந்த பின், உடையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு கெய்ஷாப் பெண்ணிடம் செல்கிறார். அவரிடம் பால் வாசனையை முகர்ந்த மலட்டு கெய்ஷா எகுச்சியை மறுத்து அனுப்பி விடுகி றாள். பிஸினஸ் எக்சிகியூட்டிவ்வின் மத்திய வயது மனைவியுடன் எகுச்சி நடனமாடிக் கொண்டிருக்கிறார். தன்னை முத்திமிடக்கூடிய நெருக்கமுள்ள ஆண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிப் பார்த்தபின் அவள் உறங்குவது வழக்கம் என்று கூறுகிறாள். விரல்விட்டு எண்ணினால் மனம் அந்த ஆண்களை வடிவப் படிமமாகக் கொண்டு வராதா? வெறும் எண்ணிக்கையுடன் நின்று விடுமா என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறா.
அவருடன் உறங்கும் இந்த இளம் பெண் எகுச்சியின் நினைவுச் சங்கிலியில் அவர் சந்தித்த பிற பெண்களை பிணைத்து விடுகிறாள். விடுதிக்கு வெளியே கடல் அலைகள் மோதி உடைகின்றன. காற்று ஊளையிடுகிறது. கியோடோவில் தனது கல்லூரிப்படிப்பு முடிந்து வேலைக்குப் போகத் தொடங்கிய சமயம் இளம் பெண் ஒருத்தியுடன் ஓடிப் போக திட்டமிடு கிறார். ரயில் பாதை வழியாக தப்பித்துச் செல்லும் போது பல சின்னச் சின்ன குகைகளைக் கடந்து வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் அந்த மலைப் பகுதியில் ஒரு வானவில் தோன்றுகிறது. வானவில்களை ஒவ்வொரு முறையும் வியக்கிறாள் அந்தப் பெண். தன்னுடைய 67வருட வாழ்க்கையில் சந்தித்த பெண்களில், அந்தப் பெண்ணுடையதைப் போன்றதான மிகச்சுத்தமான உடல் உட்பாகங்களைப் பார்த்ததில்லை என்று இப்போது நினைவு கூர்கிறார். இவ்வளவு மென்மையான நினைவுகளை துவக்கி விட்ட உறங்கும் இந்தப் பெண்ணை நன்றியுடன் நோக்குகிறார். விடுதியில் தரப்படும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உறங்கப் போகிறார்.
இரண்டு வாரங்கள் கழித்து விடுதியில் இருந்து தொலைபேசியில் பேசுகிறாள் விடுதியின் மத்திய வயதுப் பெண். எகுச்சியை இரவு பதினொரு மணிக்கு மேல் வரும்படி சொல்கிறாள். அவருடைய முதல் வருகை எவ்விதமான அசிங்கமான நினைவுகளையும் உண்டாக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை போகத் தீர்மானிக்கிறார். உறங்கும் பெண்ணுடன் உறங்குவது மனிதத்தன்மையானதே அல்லவென்று வாதிடுகிறார். வயோதிகர்கள் இந்த விடுதியைத் தேடிவரக் காரணம் உறங்கும் இந்தப் பெண்கள் வயதே ஆகாத விடுதலையைத் தருவதுதான் என்று நினைக்கிறார் எகுச்சி. அவர்கள் உறங்கியபடி இருந்தாலும் வயோதிகர்களின் கீழ்த்தன்மையையும், இயலாமையையும் நினைவுறுத்தும் சின்னங்களாக இருக்கின்றனர். இருப்பினும் இப்பேர்பட்ட இளமை மற்றும் தூய்மையின் முன்னிலையில் வயோதிகர்கள் அடையும் அவமானத்தை அப்பெண்களால் அறிய முடியாது. வயோதிகர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. சென்ற வருடம் இதே நேரத்தில் வெள்ளை கெமிலியா கோவிலுக்கு தனது மூன்றாவது மகளுடன் சென்றார் எகுச்சி. அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. மிக புத்திசாலியான அவரது மகள் பல இளைஞர்களுடன் பழகுவதை எகுச்சியோ எகுச்சியின் மனைவியோ கண்டிப்ப தில்லை. எதிர்பாராத விதமாக அவரது மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறா ளோ அந்த இளைஞனால் அவளது கன்னித்தன்மையை இழக்கி றாள். இந்நிகழ்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்படுகிற தனது மகளை ஒரு மாற்றத்திற்காய் வெள்ளை கெமிலியா மரக்கோயி லுக்கு அழைத்து வருகிறார். அந்தக் கோயில் நகரின் மிக இரைச்சலான, மோசமான பகுதியில் அமைந்திருக்கிறது. நானூறு வருடம் முதிர்ந்த அந்த மரம் ஐந்து நிறங்களில் பூக்கிறது. அந்தப் புராதன மரத்திற்குள் என்னவிதமான கதகதப்பு இருக்கக்கூடும் என்று வியக்கிறார்.தேனீக்களின் கூட்டமொன்று மரத்தண்டிற்குள் இருப்பது போல மென்மை யான கர்ஜனையும் மரத்திற்குள்ளிருந்து வருவதாக அவருக்குத் தோன்றுகிறது.
எட்டே நாட்களில் மூன்றாவது வருகை தருகிறார். இம்முறை அதிகப் ‘‘பயிற்சி இல்லாத” இருபது வயதிற்கும் குறைவான பெண் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். கோபே நகரில் ஒரு இரவு விடுதியில் நடனப் பெண் ஒருத்தியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தது எகுச்சிக்கு ஞாபகம் வருகிறது. நிறைய குடித்து விட்டு அவர் உறங்கி விடுகிறார். குடித்தும் தூங்க முடியாத அவள் எகுச்சியின் பயன்படுத்திய அழுக்கான உள்ளாடைகளை சுத்தமாக மடித்து வைத்து விட்டு அதிகாலையில் விடைபெறுகிறாள். அவள் இரண்டு குழந்தைக்குத் தாய் என்பதை எகுச்சியால் நம்ப முடியவில்லை. கோபே நகருக்கு மீண்டும் வந்தால் தன்னைச் சந்திக்கும்படி வேண்டியவள் பிறகு சந்திக்க வேண்டாம் என்று கடிதம் எழுதி விடுகிறாள். எகுச்சியிடம் அவள் பழகும் போது குற்ற உணர்வோ மன உறுத்தலோ இன்றி நடந்து கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. தன்னருகில் உறங்கும் தன் மகள் வயதே இருக்கும் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் ஆவள் புத்தனின் ஒரு அவதாரமாக இருக்கலாம் என்று நினைக்கிறார். ‘‘இந்தப் பெண்களுடன் உறங்குவது ஒரு ரகசிய புத்தனுடன் உறங்குவது போன்றது” என்று நண்பன் கிகோ சொல்லி இருக்கிறான்.
இதற்கிடையில் விடுதியில் தங்கிய ஃபுக்குரா என்ற ஆள் இறந்து போன செய்தியை அறிகிறார் எகுச்சி. எனினும் ஐந்தாம் முறையாக விடுதிக்கு வருகை தருகிறார். விடுதியில் ஒரு ஆள் இறந்ததால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக தனியாக உறங்க மறுக்கின்றனர் பெண்கள். எனவே எகுச்சி இன்று இரண்டு பெண்களுக்கிடையில் உறங்குகிறார். கறுப்புப் பெண் சற்று வயது முதிர்ந்தவள், சிவப்புப் பெண் இளையவள். அதிகாலை நான்கு மணிக்கு விழிப்புக் கொள்ளும் எகுச்சி, கறுப்புப் பெண் இறந்து போயிருப்பதை அறிகிறார். அவளுக்குத் தரப்பட்ட தூக்க மாத்திரையின் அளவு அதிகமாகப் போயிருக்கலாம். விடுதியின் மத்திய வயதுப் பெண் இறந்துப் போனவளை அறை யிலிருந்து அகற்றுகிறாள். இன்னொரு பெண்தான் இருக்கி றாளே அவளுடன் தொடர்ந்து உறங்கலாமே என்று மத்திய வயதுப் பெண் எகுச்சியிடம் சொல்கிறாள். எகுச்சிக்கு தூங்கு வதற்கு தூக்கமாத்திரை தரப்படுகிறது. கொஞ்ச நேரத்தில் கீழே ஒரு கார் புறப்பட்டுச் செல்கிறது.
இம்மாதிரியான கதைக் கருவை விரசத்தின் சாயல் சிறிதும் விழுந்து விடாமல் எழுத கவாபட்டா போன்ற பெரும் கலை ஞர்களால் தான் முடியும். முதற்பதிப்பு 1969ஆம் ஆண்டு வெளி வந்தது. Edward Seidensticker ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
